வவுனியா, உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற இளைஞனே இரத்த கறை காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து புதன்கிழமை (16.04) மாலை இளைஞர் ஒருவரின் சடலம் இரத்தக் கறை காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தது.
சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த புதுவருட தினமன்று காணாமல் போயிருந்த வவுனியா விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிதாசன் (வயது 33) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டிருந்தது.
குறித்த இளைஞன் புதுவருட தினத்தன்று (14.04) காலை வீட்டில் இருந்து சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின் காலையில் சூடுவெந்தபுலவு வீதியில் நின்றதாகவும் தமது கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற போது,
மரணமடைந்த இளைஞர் தன்னை சிலர் தாக்குவதாகவும், உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் போறேன். பொலிஸ் நிலையத்தில இறக்கி விடும் படியும் கோரியுள்ளார்.
இதனையடுத்து குறித்த இளைஞரை உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டதாகவும், அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அதன்பின் அவரை தேடியும் கிடைக்காத நிலையில் இரண்டு தினங்களின் பின் கடந்த புதன் கிழமையே (16.04) சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள உறவினர்கள் இக் கொலைக் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் உறவினர்கள் தமது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.