பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து பெண் கிராம அலுவலர்களும் இன்று (14) முதல் இரவுப் பணியிலிருந்து விலகுவார்கள் என்று இலங்கை கிராம அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர வைத்தியசாலையின் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் தவறான நடத்தைக்குட்படுத்தப்பட்ட விடயம் நாட்டையே பரபரப்பிற்கு உள்ளாக்கியிருந்தது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் உள்ள பெண் கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று கிராம அலுவலர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்நிலையில் தற்போது, பாதுகாப்பு கருதி அனைத்து பெண் கிராம அலுவலர்களும் இன்று முதல் இரவுப் பணியிலிருந்து விலகுவார்கள் என்று இலங்கை கிராம அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், பாதுகாப்பற்ற மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள அலுவலகங்களை மூடவும், பாதுகாப்பை உறுதி செய்யும் இடத்திலிருந்து அலுவலக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் கொழும்பு மாவட்டத் தலைவர் ஷாமலி வத்சலா குலதுங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இரவுப் பணிகளில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ் குறிப்பிட்டார்.