வவுனியா மன்னார் பிரதான வீதியில் அமைந்துள் பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் முன்பாக இன்று (28.08.2024) காலை 10.30 மணியளவில் நீடித்த அசாதாரண நிலமையினையடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
வவுனியா பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் சாதாரண சேவையின் கீழ் 25 நபர்களுக்கும், ஒருநாள் சேவையின் கீழ் 25 நபர்களுக்கும், ஏற்கனவே சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து குறிப்பிட்ட காலம் முடிவடைந்தும் கடவுச்சீட்டினை பெறாதவர்கள் 10 நபர்கள் என ஒரு நாளைக்கு 60 நபர்களுக்கு வவுனியா பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை பெறுபவர்களில் முக்கிய தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படுகின்றன.
இந்நிலையில் வவுனியா பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு முன்பாக கடந்த ஐந்து நாட்களாக வரிசையில் நின்றும் தமக்கும் இதுவரை கடவுச்சீட்டு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்து திணைக்கள காரியாலயம் முன்பாக குழப்ப நிலமை ஏற்பட்டது.
அதனையடுத்து வவுனியா பொலிஸார் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவ்விடத்தில் நிலவிய அசாதணை நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையுடன் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளை திணைக்கள வாயில் முன்பாக வரவழைத்து வரிசையில் நின்ற மக்களுக்கு தற்போதைய நிலமை தொடர்பில் தெளிவூட்டல் வழங்கப்பட்டமையினையடுத்து நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மேலும் கடவுச்சீட்டினை நாளையதினம் பெறுவதற்காக மக்கள் தொடர்ச்சியாக வரிசையில் காத்திருக்கின்றமையுடன் சாதாரண சேவையின் கீழ் மார்ச் மாதம் விண்ணப்பித்து கடவுச்சீட்டு பெறாதவர்கள், வெளிநாட்டியிலிருந்து வருகை தந்தவர்கள் மீண்டும் நாட்டிற்கு செல்வதற்கு கடவுச்சீட்டு கலாவதியானவர்கள்,
மாணவர்கள், சகோதரர்களின் திருமணத்திற்கு செல்லவுள்ளவர்கள், வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பு ஆவணம் கிடைத்தும் கடவுச்சீட்டு இல்லாதவர்கள் என பலரும் இவ்வரிசையில் காத்திருகின்றமை குறிப்பிடத்தக்கது.