குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புதிய பிராந்திய அலுவலகம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா – மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த பிராந்திய அலுவலகம் இன்று (16.08) திறந்து வைக்கப்பட்டது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் வவுனியா, உள்வட்ட வீதியில் செயற்பட்டு வந்த நிலையில் போதிய இடவசதி மற்றும் ஏனைய வசதிகள் இன்மையால் கடந்த 2 ஆம் திகதி முதல் அவ் அலுவலகத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து, புதிய அலுவலகம் போதிய வசதிகளுடன் 24 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்பப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டு சேவைகளும் மீள ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது குடிவரவு குடியகல்வு திணைக்கள சேவைகளைப் பெறுவதற்கு அதிகளவிலான மக்கள் வருகை தந்திருந்தனர்.
இந்நிகழ்வில் குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய, மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், ஆட்பதிவு திணைக்கள வவுனியா பிராந்திய அலுவலகப் பணிப்பாளர் கிருபாகரன், பொலிஸ் அதிகாரிகள், மதத்தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.