இந்திய மாணவர்களுக்கு போலி அனுமதி சலுகை கடிதங்களைக் கொடுத்து கனடாவுக்கு அனுப்பிய நபர், தன் தவறுக்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, ப்ரிஜேஷ் மிஸ்ரா (Brijesh Mishra, 37) என்பவர் நடத்தும் Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக 700 மாணவர்கள் கல்வி விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அவர்கள் கனடாவில் படிப்பை முடித்து, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போது அவர்களுடைய அனுமதி சலுகை கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், சுற்றுலா விசாவில் கனடா வந்த மிஸ்ராவை 2023ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இவர் நேற்று வான்கூவர் நீதிமன்றம் ஒன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, எனது தவறுகளுக்காக வருந்துகிறேன், கடந்த காலத்தை என்னால் மாற்றமுடியாது, ஆனால், இனி அந்த குற்றத்தை நான் செய்யமாட்டேன் என என்னால் உறுதியளிக்கமுடியும் என்று கூறியுள்ளார்.
கனடாவில் வெறும் 19 மாதங்கள் மட்டுமே மிஸ்ரா சிறையில் செலவிடவேண்டும் என்றாலும், அதற்குப் பின் அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட உள்ளார்.
எனினும் இந்தியாவில் அவர் மனிதக்கடத்தல் முதலான குற்றச்சாட்டுகளை எதிகொள்ள வேண்டியிருக்கும் எனவும் அந்த குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனையாக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம் என தெரவிக்கப்படுகிறது.