வீடியோ அழைப்பில் பேசிய மனைவியை கொலை செய்து புதைத்த கணவன்!!

391

அறிமுகம் இல்லாத நபர்களுடன் வீடியோ காலில் பேசுவதாக சந்தேப்பட்டு மனைவியை கணவன் கொலை செய்து புதைத்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கர்நாடகா மாநிலம், ராமநகர மாவட்டம் சன்னபட்னா தாலுகாவில் உள்ள மதுகிரிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(32). இவருக்கும், அஸ்வினி(27) என்ற பெண்ணுக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே ரமேஷுக்கும், அவரது மனைவி அஸ்வினிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி மீது சந்தேகம் கொண்ட ரமேஷ், யாரிடம் வீடியோ காலில் பேசுகிறாய் என்று அஸ்வினியிடம் சண்டை போட்டு வந்தார்.



இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு அவரது சொந்த ஊரான மேனேவுக்கு சென்று விட்டார். இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி மேனேவுக்குச் சென்ற ரமேஷ், இனிமேல் சண்டை போடமாட்டேன் என்று உறுதியளித்தார்.

இதன் பேரில் கோபித்துக் கொண்டு சென்ற அஸ்வினி, கணவர் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில், அஸ்வினிக்கு அவரது பெற்றோர் போன் செய்தனர். ஆனால், அவர் பலமுறை அழைத்தும் அஸ்வினி, பெற்றோர்களின் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை.

இதனால் அஸ்வினியை பார்ப்பதற்காக அவரது பெற்றோர் நேற்று மாலை மதுகிரிஹள்ளி கிராமத்திற்கு வந்திருந்தனர். அப்போது வீட்டில் அஸ்வினி இல்லை. அதே போல ரமேஷும் வீட்டில் இல்லை.

இதனால் பதற்றமடைந்த அஸ்வினியின் பெற்றோர், தங்களது மகளைத் தேடத் துவங்கினர். அப்போது வீட்டின் பின்புறம் இலைகளால் ஒரு குழி மூடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து சந்தேகமடைந்த அஸ்வினியின் பெற்றோர், அதைத் தோண்டி பார்த்தனர்.

அந்தக் குழிக்குள் அஸ்வினி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதையடுத்து சன்னப்பட்டணா கிராமிய காவல் நிலையத்திற்கு அஸ்வினியின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீஸார், அஸ்வினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக விசாரித்த போது, அறிமுகம் இல்லாத நபர்களுடன் செல்போனில் வீடியோ காலில் அஸ்வினி பேசி வருவதாக ரமேஷ் சந்தேகப்பட்டு வந்தார். அதனால் அவரை அடித்துக் கொலை செய்து புதைத்து விட்டு தப்பியோடியது தெரிய வந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், தலைமறைவாகியுள்ள ரமேஷை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.