அரேபியாவில்..
சவூதி அரேபியாவில் பணிபுரியும் போது விபத்துக்குள்ளான இலங்கையர் ஒருவர் தற்போது மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பஸ்யால பிரதேசத்தை சேர்ந்த ரசிந்த என்ற நபரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பாதிப்புக்குள்ளானவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ரசிந்த பணிபுரிந்த நிறுவனம் அவரை வைத்தியசாலையில் இருந்து எவ்வித வசதிகளும் அற்ற இடத்தில் தடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது ஒரே இடத்தில் இருக்கும் ரசிந்தவை கவனிப்பதற்கு அங்கு யாரும் இல்லை என இலங்கையில் இருக்கும் அவரது மனைவி கூறுகிறார்.
அத்துடன் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்துக்கு இது தொடர்பில் அறிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் வாழ வழிதேடி அரேபியா சென்ற நபர் விபத்தில் சிக்கிய சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி ஊடகங்களில் வெளியாகியுள்ளது.