மதுரையில்..
மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி அருகே பொட்டப்பட்டி செல்லும் சாலையில், குன்றக்குடி மடத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. அங்கே கடந்த சில தினங்களுக்கு முன், சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்ததாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர்.
எரிந்த நிலையில் இளம்பெண்ணின் உடல்
தொடர்ந்து, அப்பகுதியில் கிடைத்த தடயங்களை சேகரித்து, பெண்ணை அடையாளம் காண தொடங்கி உள்ளனர். அதன் அடிப்படையில், இறந்த பெண் திண்டுக்கல் மாவட்டம் பஞ்சயம்பட்டி என்னும் பகுதியைச் சேர்ந்த அர்ச்சுணன் என்பவரின் மனைவி ராசாத்தி என்பது தெரிய வந்தது.
மேலும், இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில், 8 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளதாகவும் போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
நத்தம் பஞ்சயம்பட்டியைச் சேர்ந்த அர்ச்சுணன், முதலில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சில நாட்களில் பிரிந்த நிலையில், இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணையும், பிரிந்து விட்டார். அர்ச்சுணன். இதற்கு அடுத்தபடியாக தான், மூன்றாவதாக ராசாத்தியை அர்ச்சுணன் திருமணம் செய்துள்ளார்.
தொடர்ந்து, சென்னையில் தனது மனைவி ராசாத்தியை அழைத்து வந்து இடியாப்ப கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார் அர்ச்சுணன். அப்போது, வேறு சில ஆண்களுடன் ராசாத்தி பழகியதாக கூறி, சந்தேகத்தின் பெயரில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இது தொடர்பாக, தனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார் அர்ச்சுணன்.தொடர்ந்து, உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி, ராசாத்தி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு பேருந்தில் அர்ச்சுணன் சென்றுள்ளார்.
பின்னர், கொட்டாம்பட்டி பள்ளப்பட்டி அருகே அவர்கள் இறங்கிய போது, அர்ச்சுணனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்துள்ளனர். இரவு நேரத்தில் தென்னந்தோப்பு வழியாக நடந்து சென்ற போது, அர்ச்சுணனின் உறவினர்கள் சேர்ந்து ராசாத்தியைக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அப்பகுதியில் ராசாத்தி உடலை தீ வைத்து எரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பெண்ணின் உடலை அடையாளம் கண்டு கொண்டதால், அர்ச்சுணனிடம் விசாரணை நடந்த போது, அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.
இறுதியில் அர்ச்சுணன், அவரது பெற்றோர் உள்ளிட்ட மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில், கணவர் உட்பட குடும்பத்தினர் எரித்துக் கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.