இந்திய பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்வது தொடர்பில் எவ்வித அறிவித்தல்களும் இதுவரை தமக்கு வழங்கப்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை இந்திய அரசாங்கமும் ஏற்றுக்கொண்டதாக அறிவித்திருந்தது.
இந்த பயணம் பெரும்பாலும் கொழும்பின் பொதுநலவாய நாடுகளி;ன் மாநாட்டின் போது எதிர்ப்பார்க்கப்பட்ட போதும் அந்த மாநாட்டை மன்மோகன்சிங் புறக்கணித்தமையால் யாழ்ப்பாண விஜயமும் சாத்தியமாகவில்லை.
இதனையடுத்து கடந்த வாரம் இந்திய நிதியமைச்சர் பா சிதம்பரம், மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக அறிவித்தார்.
எனினும் இது தொடர்பி;ல் தாம் இன்னும் அறிந்திருக்கவில்லை என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொதுநலவாய நாடுகளின் போது மன்மோகன் சிங் தமது வாய்ப்பை நழுவவிட்டதாகவும் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.