பேஸ்புக்கில் 16 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து அனுப்பிய ஆபாச பதிவுகளால் மனமுடைந்த 14 வயது மும்பை சிறுமி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மும்பையின் காந்திவ்லி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் பேஸ்புக் இணையதள பக்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து ஆபாச செய்திகளை பதிவு செய்து வந்துள்ளான்.
இதனால் மனவேதனை அடைந்த அச்சிறுமி, இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவளது பெற்றோர் இதுகுறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், இப்புகார் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்து திரும்பிய அச்சிறுமி, தனது அறைக்குள் சென்று படிக்கப் போவதாகக் கூறியுள்ளாள்.
ஆனால், இரவு வெகுநேரமாகியும் சிறுமியின் அறைக்கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அவளது பெற்றோர் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது, சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பசார், சிறுமியின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவன் தொடர்ந்து கொடுத்த தொல்லையே சிறுமியின் தற்கொலைக்குக் காரணம் எனத் தெரிவித்த அவளது பெற்றோர், தாங்கள் அளித்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.