இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி., இறுதி ஆண்டு படிக்கும் மாணவி ரூபி.
கல்லூரியில் இருந்து தனது ஆண் நண்பருடன் கோகார்ணி கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், முன்னால் வந்து மறித்தனர்.
திடீரென துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனை பார்த்து பதறிய ரூபியின் ஆண் நண்பர் தனது வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்ல முற்பட்டுள்ளார்.
அவர்களும் தங்களது வாகனத்தில் வேகமாக பின்தொடர்ந்துள்ளனர். இந்தநிலையில் பின்னால் உட்கார்ந்திருந்த ரூபியை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து அவர் சாலையில் விழுந்தார்.
குண்டு பாய்ந்த நிலையில் அவர் சாலையில் விழுந்து கிடந்த போது, பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் பொலிசார் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவியின் உடல்நிலை மோசமாக உள்ளதால் மீரட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ரூபியை துப்பாக்கியால் சுட்ட முகேஷ் சௌத்திரி என்ற இளைஞன் பொலிசில் சிக்கினான்.
ரூபியை, முகேஷ் சௌத்திரி ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அதனை ரூபி ஏற்காததால் அவன் துப்பாக்கியால் சுட்டதும் பொலிசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவனை கைது செய்த பொலிசார், அவனுடன் உடனிருந்த இரு இளைஞர்களையும் தேடி வருகின்றனர்.