சீனாவில், கணவன் மீதிருந்த கோபத்தால், நான்கு வயது மகனை, வலுக்கட்டாயமாக பெட்ரோல் குடிக்கச் செய்து தீயில் வீசிய தாயை, பொலிசார் கைது செய்துள்ளனர்.
சீனாவின், ஜிங்குவா மாகாணத்தில் வசிப்பவர், ஜாங் குவிஷேங், 48. அதே பகுதியை சேர்ந்த, ஷேன் டான், 40 என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார்.
இருவரும் ஏற்கனவே திருமணமாகி, தங்கள் முதல் துணையை விவாகரத்து செய்தவர்கள். ஜாங் குவிஷேங்கின் முதல் மனைவிக்குப் பிறந்த மகள், ஜாங்கின் இரண்டாம் திருமணத்திற்குப் பின்னும், அவருடன் வசித்து வந்தார்.
ஷேன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஜாங் தன் மகளை, முதல் மனைவியிடமே ஒப்படைத்து விட்டார். இந்நிலையில் ஜாங் ஷேன் தம்பதிக்கு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
திருமணமாகி, ஓராண்டு வரை, பிரச்சினையில்லாமல் இருந்த இவர்கள், குழந்தை பிறந்த பின், அடிக்கடி தகராறில் ஈடுபட்டனர்.
ஷேன் அடிக்கடி பணம் கேட்டு, கணவனை தொந்தரவு செய்தார். எரிச்சலடைந்த ஜாங், பணம் தர மறுத்ததால், இருவருக்கும் இடையிலான மோதல் அதிகரித்தது.
குழந்தை பிறந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் இருவருக்குமிடையிலான சண்டை ஓயவில்லை. உறவில் விரிசல் அதிகரித்தது. ஏற்கனவே, மகளை பிரிந்து வாழும் ஜாங், ஆண் குழந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.
பணம் தர மறுக்கும் ஜாங்கை பழிவாங்க எண்ணிய ஷேன், மகனின் வாயில், பெட்ரோலை ஊற்றினார். மகனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ஜாங், ஷேனின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதற்குள், பிள்ளையை கொன்றுவிட வேண்டும் என எண்ணிய ஷேன், அருகில் இருந்த தீயில் பிள்ளையை வீசி எறிந்தார். ஷேனின் கையில் இருந்த பெட்ரோல் கேன், தீயில் பட்டதால்,. தீ வீடு முழுவதும் பரவியது.
இதில், ஜாங் ஷேன் தம்பதியரும், நான்கு வயது மகனும் பலத்த தீக்காயம் அடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு வயது சிறுவனின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், விபத்து நடந்த அதிர்ச்சியில், அவனின் பேச்சு பாதிக்கப்பட்டுள்ளது.
தீக்காயத்தால் சிறுவன் கண்பார்வையும் இழந்துள்ளான். பொலிசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, ஷேனை கைது செய்துள்ளனர்.