சீனாவில் உள்ள ஷாங்காய் தொழில்வளம் மிகுந்த பகுதியாக உருவாகி வருகிறது. இதனால் திருமணங்களை ஆடம்பரமாக நடத்தி வருகிறார்கள். ஷெயாங்ஷி நகரில் பணம் படைத்த மணமகன் ஒருவர், தனது வருங்கால மனைவிக்கு பெட்டி, பெட்டியாக சீதனம் அனுப்பி வைத்தார்.
இந்த பணத்தை மூங்கில் கூடைகள், பெட்டிகளில் 18 பேர் சுமந்து சென்றனர். 100 யான் கொண்ட கட்டுகளாக இவை காட்சி தந்தன. 102 கிலோ எடை கொண்ட இந்த சீதன பணத்தின் மொத்த மதிப்பு ரூ.90 கோடி ஆகும்.
இந்த காட்சி சீன இணையதளத்தில் வெளியாக பலர் அதை பார்த்து வியப்பு அடைந்தார்கள். ஆனால் சிலர் கடும் ஆதங்கத்தை கொட்டினார்கள். ‘திருமணம் பணத்தில் தான் நிர்ணயிக்கப்படுகிறதா?’ என்றும், ‘திருமண வாழ்க்கையை பணம் தான் தீர்மானிக்கிறது என்றால் உள்ளத்திற்கு அங்கே இடமில்லையே?’ என்பன போன்ற வாசகங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.