கூகுள் நிறுவனத்துடன் இணைந்து முழு இலங்கையையும் உள்ளடங்கும் வகையில் இணைய வசதி வழங்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் கூகுள் நிறுவனத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்று நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கையினூடாக கிழக்கையும், மேற்கையும் இணைக்கும் பிரதான வர்த்தக மார்க்கம் அமைந்துள்ளது.
வர்த்தக மற்றும் கலாசார பரிமாற்றம் மற்றும் சுற்றுலா கைத்தொழில் தொடர்பான நீண்ட வரலாறு இலங்கை துறைமுகங்களுக்கும் நகரங்களுக்கும் இருக்கிறது. இலங்கை என்பது கருத்து, பொருள் மற்றும் மனிதர்கள் சுதந்திரமாக பரிமாறப்படும் உலகத்துடன் சிறந்த தொடர்புகளை பேணும் நாடாகும்.
ஆனால் கடந்தகால இலங்கை குறித்து அவ்வாறு கூற முடியாது. கடந்த இரு தசாப்தங்களுக்கு முன்னர் வரை ஒவ்வொரு அலுவலகமாக சென்று பல ஆவணங்களை நிரப்பி தொலைபேசி இணைப்பு கிடைக்கும் வரை பல வருடங்கள் காத்திருக்க நேர்ந்தது. தொலைபேசி கட்டணங்கள் அன்று அதிகமாக காணப்பட்டன. வசதியுள்ள, பலம் படைத்தோருக்கே அது மட்டுப்படுத்தப்பட்டது.
டெலிகொம் நிறுவனம் தனியார் மயப்படுத்தப்பட்டபின்னர் போட்டித் தன்மையுடன் சம அவகாசத்துடன் கூடிய புதிய யுகம் ஆரம்பிக்கப்பட்டது. நாட்டின் சகல பிரஜைகளுக்கும் உயர் தரத்தினாலான கைபேசி வலையமைப்பை அறிமுகப்படுத்தவும் இதனூடாக வாய்ப்பு ஏற்பட்டது.
21 ஆம் நூற்றாண்டில் எமது வாழ்வில் சகல அம்சங்களும் இணையத்தளத்தினூடாக பின்னிப் பிணைந்துள்ளன. எனவும் தெரிவித்துள்ளார்.