களுத்துறை, அகலவத்தை பிரதேசத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அகலவத்தையை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரது காதலன் மோட்டார் சைக்கிளில் தென்னந்தோப்புக்கு அழைத்து சென்று, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளதாக மத்துகம தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிழந்தவர் அகலவத்தை, மேர்வின் சமரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 33 வயதுடைய விவாகரத்து பெற்ற மதுஷானி என்ற பெண் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் விவாகரத்தின் பின்னர் அகலவத்தை பகுதியில் வசிக்கும் இளைஞனுடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்தார். அவர் கடந்த 18ஆம் திகதி தனது காதலனை சந்தித்துள்ளார். இருவரும் தென்னந்தோப்பு உள்ள பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
அங்கு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்து இளம்பெண்ணை கொலை செய்துள்ளார்.
கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் கிடந்த பெண்ணின் உடலை கண்ட உள்ளூர்வாசிகள் மத்துகம பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இளம் பெண்ணைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் காதலன் தற்போது அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும், சந்தேக நபரைக் கைது செய்ய 3 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.