வவுனியா வைத்தியசாலை பிண அறையின் குளிரூட்டி பழுது : அலட்சியமாக இருந்த வைத்தியசாலை நிர்வாகம்?

1977

வவுனியா வைத்தியசாலையின் பிண அறையின் குளிரூட்டி கடந்த இருவாரங்களாக பழுதடைந்துள்ள நிலையில் அதனை சீரமைப்பதில் வைத்தியசாலை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

குளிரூட்டி இயங்காமையினால் வவுனியாவில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு தொடர்ச்சியாக அனுப்பப்பட்டுவருகின்றது. இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

அதனை திருத்துவதற்கான முயற்சிகள் வைத்தியசாலை நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்ற போதும் அது வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.



இந்நிலையில் நேற்றையதினம் வவுனியாவில் நீச்சல்குளம் ஒன்றில் வீழ்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தார்.

அவரது சடலத்தை செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறும் நாளையதினம் காலை மீண்டும் அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சட்டவைத்திய பரிசோதனைகளை முன்னெடுக்குமாறும் வைத்தியசாலை நிர்வாகத்தால் இறந்தவரின் உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதற்கான செலவினை உயிரிழந்தவரின் உறவினர்களே பொறுப்பேற்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வறுமை நிலையில் உள்ள குறித்த குடும்பத்தினர் இது தொடர்பாக கவலை தெரிவித்திருந்தனர்.

அரசியல் தலையீட்டால் உயிரிழந்தவரின் சடலத்தை வைத்தியசாலை நிர்வாகத்தின் ஏற்ப்பாட்டில் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.