வவுனியாவில் காச நோயால் கடந்த வருடம் 9 பேர் இறப்பு : 56 பேர் பாதிப்பு!!

418

காச நோயினால் வவுனியாவில் கடந்த வருடம் 9 பேர் இறந்துள்ளதுடன், 56 பேர் நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட காச நோய் கட்டுப்பாட்டு பிரிவின் வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வவுனியாவில் இன்று (24.03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இம்முறை ‘ஆம் எங்களால் காச நோயை முடிவுக்கு கொண்டுவர முடியும்’ எனும் தொனிப்பொருளில் உலக காசநோய் தினம் மார்ச் 24 ஆம் திகதி நினைவு கூரப்படுகின்றது.



இலங்கையை பொறுத்த வரை ஒரு இலட்சம் பேரில் 62 பேர் காச நோயாளர்களாக இனம் காணப்பட வேண்டும். ஆனால் கடந்த வருடம் 8 ஆயிரம் பேரே நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். விகிதாசாரத்தின் படி அதன் எண்ணிக்கை 14 ஆயிரமாக இருக்க வேண்டும்.

கடந்த வருடம் வவுனியா மாவட்டத்தில் 56 நோயாளர்கள் இனம் காணப்பட்டனர். அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் நோய் வந்து உரிய நேரத்தில் சிகிச்சைக்கு வராமல் காலதாமதமாக வந்தமையால் அந்த மரணம் ஏற்ப்பட்டது.

குறிப்பாக தொடர்ச்சியாக இரு வாரங்களிற்கு மேற்ப்பட்ட இருமல் மாலை நேரத்தில் காய்ச்சல், உணவில் நாட்டம் இன்மை, உடல்நிறை குறைவடைதல், சளியுடன் இரத்தம் வெளியேறல் இப்படியான அறிகுறிகள் தென்பட்டால் அது காசநோயாக இருக்கலாம்.

மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள பொது வைத்தியசாலைகளுக்கு சென்று சாதாரண சளிப்பரிசோதனையினை இலவசமாக செய்து கொள்வதன் மூலம் இந்த நோயினை இனம் காணலாம்.

எந்தவித அறிகுறியும் இல்லாமலும் இந்த நோய் உடலில் இருக்கலாம். குறிப்பாக ஏற்கனவே நோய் ஏற்ப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அல்லது நாட்பட்ட நோய் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், சிறுநீரக நோயாளர்கள் போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் வெளிப்படாமல் இந்த நோய்கிருமி தங்கக்கூடும். அப்படியானவர்களுக்கு பரிசோதனையினை செய்வதன் மூலம் அதனை கண்டறியலாம்.

ஒருவருக்கு காசநோய் ஏற்ப்பட்டால் ஆறு மாதத்திற்கு நேரடி கண்காணிப்புடனான சிகிச்சையின் மூலம் மருந்துகளை பெற்றுக்கொண்டால் அதனை முற்றாக குணப்படுத்தலாம். அதற்கான மருந்து உள்ளது. அது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சிகிச்சைகளை எடுக்கத்தவறினால் அது தீவிரமடைந்து இறப்பிற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்.