நான்கு வயது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த பெண் : சிறுவனின் சடலம் மீட்பு!!

565

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல்போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் இன்று(17) மீட்கப்பட்டுள்ளது. தினேஷ் ஹம்சின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தலவாக்கலை பொலிஸாரும், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த தேடுதலின்போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக தனது நான்கு வயது மகனுடன் தாயொருவர், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்குடன் தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் நேற்று மாலை குதித்திருந்தார்.



இதனையடுத்து குறித்த தாய் மீட்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிறுவன் காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய தினம் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

41 வயதான குறித்த பெண் கணவரை பிரிந்து பூண்டுலோயா பகுதியை சேர்ந்த மற்றுமொரு நபருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

அந்நபர் மற்றுமொரு திருமணம் செய்துகொள்வது தொடர்பில் எழுந்த பிரச்சினையாலேயே இப்பெண் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாம் இணைப்பு

தலவாக்கலைப் பிரதேசத்தில் நான்கு வயதுக் குழந்தையொன்றுடன் பெண்ணொருவர் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (16) மாலை, 41 வயதுடைய தாயொருவர் தனது நான்கு வயதுக்குழந்தையுடன் , தலவாக்கலை – மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார்.

அதனைக் கண்ட பொதுமக்கள் பொலிசாருக்குத் தகவல் வழங்கியுள்ளதுடன், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில் தாய் காப்பாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் பொலிசாரினால் அழைத்துச்செல்லப்பட்டு, லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவரது நான்கு வயதுக்குழந்தை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் குழந்தையை தேடும் பணியில் பொலிஸாரும் பொது மக்களும் நேற்று மாலை வரை ஈடுபட்டிருந்தனர்.