யாழில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : சந்தேகத்தில் கணவன் கைது!!

765

யாழ்ப்பாணம் தாளையடியில் பெண்ணொருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (15.05.2024) குறித்த சந்தேக நபரை கைது செய்து மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுத்துறை வடக்கு தாளையடி பகுதியில் கடந்த 10ஆம் திகதி பெண் ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.



கடற்றொழிலுக்கு சென்று அதிகாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கழிப்பறைக்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் மனைவி சடலமாகக் கிடந்துள்ளார் என தெரிவித்து உயிரிழந்த பெண்ணின் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அவரின் முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் அடிக்கடி முரண்பாடு ஏற்படுவது தெரியவந்துள்ள நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 52 வயதான பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபரை இன்றையதினம் (16) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.