அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சா வழியை சேர்ந்த சீக்கியரான குர்ப்ரீத் கெர்ஹா என்பவர் நியூஜெர்சி நகரில் உள்ள கார் டீலரிடம் வேலை கேட்டு விண்ணப்பித்தார்.
நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்ற அவரை வேலையில் சேர்த்துக் கொள்வதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. ஆனால், தாடியை எல்லாம் நீக்கிவிட்டு ‘டிரிம்மாக’ வேலைக்கு வர வேண்டும் என அந்நிறுவனத்தின் மேலாளர் உத்தரவிட்டார்.
மத சம்பிரதாயங்களை மீறிய வகையில் தாடியை எடுக்க முடியாது என குர்ப்ரீத் கெர்ஹா மறுத்துவிட்டார். அப்படியென்றால், உங்களுக்கு இங்கே வேலை தர முடியாது என்று மேலாளர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனையடுத்து, அமெரிக்காவில் வாழும் சீக்கியர் அமைப்புகள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட நபரின் சார்பில் 2009ம் ஆண்டு நியூஜெர்சி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
சமநீதி, சமஉரிமை கோட்பாடுகளை மீறிய வகையில் கார் டீலர் நிறுவனம் தன்னை வஞ்சித்து விட்டதாகவும், தனக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் குர்ப்ரீத் கெர்ஹா வாதாடினார்.
கடந்த 4 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கக்கூடிய சூழ்நிலை நிலவும் இவ்வேளையில் அவருடன் சமரசம் செய்துக்கொள்ள பிரதிவாதி முன்வைத்துள்ளார்.
பாதிக்கப்பட்டவருக்கு 50 ஆயிரம் டொலர்கள் இழப்பீடு தருவதாகவும், வழக்கை மீளப்பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குர்ப்ரீத் கெர்ஹா, ‘எனது தனிப்பட்ட நலனுக்காக நான் கோர்ட்டை அணுகவில்லை. எதிர்காலத்தில் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய அனைத்து சீக்கியரின் நலனுக்காகவும் நான் வாதாடி வெற்றி பெற்றுள்ளேன்’ என்று கூறினார்.