இலங்கை குறித்து புதிய படம் ஒன்றை தயாரிக்கவென சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் குழுவிற்கு அரசாங்கம் தகவல் வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
சனல் 4 ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்கி அவர்களை நாட்டுக்கு வரவழைத்துவிட்டு அரசாங்கம் மறைந்து கொண்டதாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
´இலங்கை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்குவதை போல் சர்வதேசத்திற்கும் வாக்குறுதி வழங்கியுள்ளது. பொதுநலவாய மாநாட்டின் மூலம் இலங்கைக்கு எந்த பயனும் இல்லை. மாநாட்டிற்கு குறைந்தளவு தலைவர்களே வருகை தந்திருந்தனர்.
அரசாங்கத்தில் இருக்கும் நபர்கள் கூட மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டாம் எனக் கூறியிருந்தனர். மாநாட்டிற்கு 1500 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
சிலவேளைகளில் சர்வதேசம் நல்லம் சிலவேளைகளில் சர்வதேசம் மோசம் என அரசாங்கம் தெரிவிக்கிறது´ என லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா, கெசினோவிற்கு எதிர்ப்பை தெரிவிக்க ஐதேக தலைமைத்துவ சபை தீர்மானித்துள்ளதென கூறினார்.
கெசினோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 27ம் திகதி மாலை கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.