இலங்கையில் இருந்து படகு மூலமான ஆட்கடத்தல்களுக்கு காரணமாக இருந்த கடற்படை அலுவலரை கைது செய்தமை குறித்து அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலியா பிஷப் இலங்கை அரசாங்கத்தை பாராட்டியுள்ளார்.
எனினும் அவர் மீதான விசாரணைகள் குறித்து கருத்துக்கூற அவர் மறுத்துவிட்டார்.
அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல்கள் தொடர்பில் இலங்கையின் கடற்படை அலுவலரான லெப்டினன்ட் கொமாண்டர் சஞ்சீவ அன்னாத்துகொட என்பவரும் நான்கு கடற்படை வீரர்களும் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கடற்படை அலுவலர் திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்தின் ஒத்துழைப்புடன் அவுஸ்திரேலிய கடற்பயணத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் குறித்த கடற்படை அலுவலர் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் நிலவரங்களை பார்க்கும் போது அங்கிருந்து அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோருவதற்கு காரணங்கள் இல்லை என்றும் பிஷப் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாம் அரசாங்க அமைச்சர்களுடன் கலந்துரையாடியதாக பிஷப் குறிப்பிட்டுள்ளார்.