பதுளை சிறையில் கைதி ஒருவரிடம் இருந்து ஹெரோயின் மற்றும் சிம் கார்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நபர் மத்திய மாகாண கல்வித் திணைக்கள முன்னாள் கணக்காய்வாளர் லலித் அம்பன்வல மீது அசிட் வீசிய குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர் என தெரியவந்துள்ளது.
அநுராதபுரம் நீதிமன்றில் விசாரிக்கப்படும் வழக்கு ஒன்றிற்காக குறித்த நபர் பதுளை சிறையில் இருந்து அநுராதபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவர் 25000 ரூபா பணத்தை மறைத்து வைத்திருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி அவரை சோதனைக்கு உட்படுத்திய அதிகாரிகள் அவரது மலவாயிலில் மர்மம் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சந்தேகித்தனர்.
பின்னர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சோதனை செய்தபோது 12 பைக்கற் ஹெரோயின் மற்றும் 5 சிம் கார்டுகள் அவரது மலவாயிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் சிறை அதிகாரி துசித உடவர தெரிவித்தார்.